Pages

Friday, June 20, 2014

தெய்வம் அனுப்பிய திருவிழா




எப்போதோ பெய்த
உனது மழையில்
இப்போது நனைந்தாலும்
வானவில் முளைக்கிறது

வண்ணத்துப் பூச்சிகளின்
சிறகுகளுக்கும்
வர்ணம் வழங்கும்
வாலிபக் களஞ்சியம் நீ
பூக்கள் உடுத்தி
கமழ்ந்து நடக்கும்
நந்தவனம்

மீன்கள் வசிக்க
தடாகம் சுமக்கும்
நதிகளின் குழந்தையாம்
உன் நயனங்களின்
பார்வை பயணங்களில்
தொலைந்தது என்னவோ
என் சயனங்கள்.

இதயக் கரும்பலகையில்
கைப்படாமல்
காதலின் பாடங்களை
மௌனத்தால் எழுதிய
பேராசிரியை நீ.

உதிரா முறுவல் பூக்கும்
உதட்டுக் காம்புகளால்
உதிர்ந்துபோன இதயம்
நட்சத்திரங்கள்
கொட்டிவைத்த உனதின்
பெட்டகத்துள் இருப்பதால்
ஜொலிக்கிறது வாழ்க்கை

உளி இல்லாமல்
கல் இல்லாமல்
உள்ளம் செதுக்கிய
சிற்பமான உன்
வசந்த வருகையில்
நிலவை வீட்டுக்கு
கொண்டுவந்த
பெருமை எனக்கு

திருவிழா காலம்
மட்டுமே தேரில்
திரு உலாப்போகும்
தெய்வங்கள் பார்த்த
எனக்கு
தெய்வங்கள் பார்த்து
அனுப்பிய திருவிழாவே நீதான்.

அன்பை
அஸ்திவாரமாக்கி
எழுப்பப்பட்ட
வாழ்க்கைக் கட்டிடம்
நாளைய மாணவர்கள்
நம்மை கற்கும் பள்ளிக்கூடமாக
என்னை மாற்றிய
உன் கருணை ஒளிபோதும்
நான் ஆயிரம் ஜென்மம்
வாழ்ந்து கொள்வேன்

0 comments

Post a Comment